வெள்ளி, 30 ஜனவரி, 2009

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

ஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து "கிறிஸ்துமஸ்" என்றுச் சொல்லக்கூடிய "கிறிஸ்து ஜெயந்தியை" கொண்டாடுகிறோம்.

இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள்.

உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால்,

இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே.

وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آَيَةً لِلْعَالَمِينَ

இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (குர்‍ஆன் 21:91)

எனினும், சில இஸ்லாமியர்கள் கிறிஸ்து ஜெயந்தி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சொல்வது,

"கிறிஸ்தவர்கள் இயேசுவை திரித்துவத்தில் ஒருவர் என்று கருதி அவரை வணங்குகிறார்கள்" என்பதாகும்.

இறைவன் தனித்தன்மை வாய்ந்த ஒருவரே இறைவன் என்றும் மற்றும் அந்த இறைவன் தான் இயேசுவாக இறங்கிவந்தார் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது(உபாகமம் 6:4,5, சகரியா 14:9, யோவான் 1).

கிறிஸ்தவத்தில் உள்ள அனைத்து பெரிய குழுக்களின் முக்கிய போதனையும் இது தான். இதை ஏன் எல்லா கிறிஸ்தவ குழுக்களும் உண்மை என்று நம்புகிறார்கள் என்பதற்கான முக்கிய காரணம், "பைபிள் இதை போதிக்கிறது" என்பதால் தான்.

தேவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்ற "அதிர்ச்சி தரும்" உண்மையை நாம் நீக்கிவிட்டால், பைபிளில் உள்ள அனைத்தையும் நம்புவது இஸ்லாமியர்களுக்கு சுலபமாகிவிடும்.

தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் இயேசுவைப் பற்றிய உண்மை இருந்தும் ஏன் இஸ்லாமியர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புவதினால் தான்.

உண்மையில் சிந்தனையில் மாறுபாடுள்ளவர்கள் "கடினமான பகுதிகளை" எடுத்துவிட விரும்புவார்கள், ஆனால் "நம்புவதற்கு கடினமான" விவரங்களை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்

கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான‌ இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கள் பெரும்பான்மையாக "அவைகள் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?" என்ற சந்தேகத்தைச் சுற்றியே இருக்கும்,

அதற்கு பதிலாக, "ஏன் அவைகள் அப்படி இருக்கின்றன என்று முன்வைக்கபப்டும் காரணங்களை" அவர்கள் கவனிப்பதில்லை.

இது மிகவும் ஆச்சரியமானது, ஏனென்றால், விசுவாசிகள்(இறை நம்பிக்கை யுள்ளவர்கள்) "இறைவன் என்பவர் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவருக்கு ஆரம்பமுமில்லை, முடிவுமில்லை மற்றும் அவருக்கு எல்லாம் தெரியும்" போன்ற அவருடைய குணங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஆகையால், நம்முடைய இப்போதைய விளக்கத்தில், "ஏன் இறைவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்பது தான் முக்கியமே தவிர அவர் அதை எப்படி செய்தார்" என்பதல்ல

கிறிஸ்து ஜெயந்திக்கான முதல் காரணம்: பாவத்தின் முக்கியத்துவம்

நாம் நினைப்பதை விட நம்முடைய பாவங்கள் மிகவும் கொடுமையானவைகளாகும். உங்களில் அனேகருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்,

ஆதாமும் ஏவாளும் எத்தனை பாவங்கள் செய்தார்கள் என்று அவர்களை இறைவன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார்.

அவர்கள் செய்தது ஒரே ஒரு பாவம் தான். ஒரே ஒரு முறை பாவம் செய்து கீழ்படியாமல் போனதினால், அவ்வளவு பெரிய விளைவை அது உண்டாக்கியது எனபதிலிருந்து, பாவம் என்பது வெறும் சிறிய பிழை அல்ல என்பதை நாம் விளங்கலாம்.

பைபிளின் படி, பாவம் என்பது நம்மை படைத்த இறைவனுக்கு எதிராக நாம் கலகஞ் செய்வதாகும் மற்றும் நம்முடைய தகாத ஆசைகளினாலும், சிந்தனையினாலும் மற்றும் செயல்களாகும் இறைவனை துக்கப்படுத்துவதாகும்.

பாவம் மிகவும் கொடுமையானது என்பதை, இஸ்லாமிய போதனையிலிருந்தும் கூட நாம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.

அதாவது, அல்லாவிற்கு இணைவைத்து வணங்கும் பாவமாகிய "ஷிர்க் " என்ற பாவம் "நியாயத்தீர்ப்பு நாளில்" கூட மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் போதிக்கிறது.

இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, "பெரிய பாவங்கள்" என்று க‌ருதுப‌வ‌ற்றில் ஒரு சில‌ இவ்வித‌மாக‌ உள்ள‌து,

அதாவது, 1)அல்லாவின் கட்டளைக்கு எதிராக வேறு ஒரு அதிகாரத்திற்கு கீழ் படிந்து இருப்பது, மற்றும் 2) அல்லாவிற்கு காட்ட‌வேண்டிய‌ அன்பை ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் காட்டுவ‌து ஆகும்.

இதே போல, "சிறிய‌ பாவ‌ங்க‌ள்" கூட‌ ப‌ல‌ வ‌கையாக‌ உள்ள‌ன‌. அதாவ‌து, ச‌குண‌ம் பார்ப்ப‌து, குறிசொல்ப‌வ‌ரிட‌ம் சென்று குறி பார்ப்ப‌து, இன்னுமுள்ள‌ மூட‌ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை பின்ப‌ற்றுவ‌து,

ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளின் க‌ல்ல‌ரைக‌ளில் சென்று அவ‌ர்க‌ளிட‌ம் ஜெபிப்பது(துவா கேட்ப‌து), ஜோசிய‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளையும், எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்வு பற்றிய கனவுகளுக்கு பொருள் கூறுப‌வ‌ர்க‌ளை புக‌ழுவ‌து,

ந‌ம்மிட‌ம் உள்ள‌வைக‌ள் ப‌ற்றி பெருமையாக‌ வெளியே மற்ற‌வ‌ர்க‌ளுக்கு காட்டுவ‌து, அல்லாவின் க‌ட்ட‌ளையின் ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்கும் ஒருவ‌ரின் அவ‌ல‌ நிலையைக் க‌ண்டு ம‌ன‌த‌ள‌வில் திருப்தியில்லாம‌ல் இருப்ப‌து போன்ற‌வைக‌ள் சிறிய‌ ஷிர்க்குள் ஆகும்.

இந்த பெரிய மற்றும் சிறிய ஷிர்க்குகள் மிகவும் கடுமையானவைகள், மற்றும் இவைகளை ஒருவர் சுலபமாக செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. இவைகளை நாம் சுலபமாக கண்டுபிடித்தும் விடலாம்.

இறைவனின் பார்வையில் பாவம் என்பது எவ்வளவு வருந்தப்படத் தக்கது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் விவரிப்போம்.

இந்த விளக்கத்தை நாம் பைபிள் மற்றும் குர்‍ஆனின் அடிப்படையிலேயே பார்க்கப்போகிறோம்.

குர்‍ஆன் அடிப்படையில் பொதுவாக நாம் "இறைவனைப் பற்றி" விவரிக்கும் போது, "அவர் பார்க்கிறார், அறிகிறார்" என்றுச் சொல்கிறோம். அவர் பார்க்கிறார் மற்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக அறிந்தும் இருக்கிறார்,

ஆனால், நம்மை அன்போடு பார்க்கிறாரா என்பது தான் கேள்வி. இறைவனின் குணநலன்களைப் பற்றி விவரிப்பது வீணாகுமா? ஆகாது, இப்போது "பாவத்தை" பற்றிய ஒரு எடுத்துகாட்டை நாம் காண்போம்.

நீங்கள் அதிகமாக விரும்பி வாங்கிய ஒரு விலை உயர்ந்த மோட்டார் கார் (Car) உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள் காலை உங்கள் காரின் முன்பாகத்தில் ஒரு பகுதி கீறலால் பாதிக்கப்பட்டு அவலட்சனமாக இருப்பதை காண்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் விசாரித்து கேட்டதில், அதைச் செய்தவர், இரண்டு வயதுடைய உங்கள் மகன் "அமீர்" என்று தெரியவருகிறது.

இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மறுபடியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா?

அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை.

எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை.

இதனால், உங்கள் மகனோடு "தந்தை மகன்" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா? அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா? இல்லை, இப்படி செய்யமாட்டீர்கள்.

இந்த நேரத்தில் அவனிடம், இனி இப்படி செய்யவேண்டாம் என்றுச் சொல்வீர்கள் மற்றும் அவனது வயதிற்கு ஏற்றாற் போல கடிந்துக்கொள்வீர்கள்/அதட்டுவீர்கள், அவ்வளவு தான்.

இப்படி நீங்கள் செய்தாலும், இதற்கு முன்பு அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்களோ அதே போல அன்பு கூறுவீர்கள்.

அவன் செய்த சேதத்திற்கு நியாயமான தண்டனையை அவனுக்கு இடாமல், அவன் மீது இரக்கத்தோடும், அன்போடும் நடந்துக்கொள்வீர்கள்,

ஏனென்றால், அந்த சேதத்திற்கான தண்டனையை(பணம் மற்றும் நேரம் செலவை) நீங்களே ஏற்றுக்கொண்டபடியால், அவன் மீது மறுபடியும் இரக்கம் பாராட்டுவீர்கள்.

கிறிஸ்து ஜெயந்திக்கான இரண்டாம் காரணம்: நம்மீது பொழிந்த‌ இறைவனின் உயர்ந்த‌ அன்பு
இப்போது மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில் சொல்லப்பட்டது போல, இறைவன் மிகவும் பரிசுத்தமானவர் மற்றும் பிழையில்லாதவர்.

நம்முடைய பாவங்கள் எவ்வளவு பயங்கரமானது/கொடுமையானது என்பதை அறிந்துள்ளார், அதே நேரத்தில் அதன் பயனாக வரும் தண்டனையை நம்மால் சுமக்க முடியாது என்றும் அவர் அறிந்துள்ளார்.

அவருடைய கண்ணோட்டத்தின் படி நாம் என்ன செய்தோம்? அதன் விளைவு என்ன? என்பதை நாம் சரியாக அறியாத காரணத்தினால், நம்மிடம் அவர் "ஏன் செய்தாய்?" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அதனால் பயன் இல்லை.

இறைவனுக்கு முன்பாக நல்லவர்கள் போல வாழ்ந்தால் போதும் என்று சிலர் எண்ணுகின்றார்கள்.

இப்படி எண்ணுவது எப்படி இருக்குமென்றால், அமீருக்கு அந்த காரை பழுதுபார்க்க எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்த பிறகு, அமீர் அமைதியாக ஒரு நாற்காலியில் இரண்டு நிமிடம் மௌனமாக உட்கார்ந்து இருப்பதற்கு சமமாகும்.

இப்படி அமீரின் தந்தை அமீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்த காரை பழுதுபார்க்கும் செலவு தானாகவே சந்திக்கப்படுமா?

தேவன் நம்மை நேசிக்கிறார், அதனால், நம் பாவங்களை மன்னிக்க விரும்புகிறார். இருந்தாலும், அவரது நீதியான நியாயத்தீர்ப்பு நமக்கு தண்டனையாக நம்மை அவரோடு வாழ இடம்கொடாமல் நிரந்தரமாக‌ பிரித்துவிடும்.

சிலுவை என்ற இடத்தில் தான் தேவன் தன் இரண்டு குணநலன்களையும் நிறைவேற்றிய இடமாகும் நம்மீது வைத்தை அன்பினால் அவர் மனிதனாக இயேசுவாக வந்தார், நமக்காக நம் தண்டனையை தன் மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார்.

இந்த தண்டனையை நாம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால், நம்மால் அது முடியாது. நாம் தேவனுக்கு எதிராக செய்த மாறுபாட்டினால் வந்த அவமானத்தை இயேசு தன் இரத்தம் சிந்தி எடுத்துப்போட்டார்.

பைபிளிலும் மற்றும் குர்‍ஆனிலும் தேவனின் மேன்மை மற்றும் புகழ் இயேசுவின் பலியினால் மறுபடியும் நிலைநிறுத்தப்பட்டது (ஒப்பிட்டுப் பார்க்கவும் எண்ணாகமம் 19:1 - 10 மற்றும் குர்‍ஆன் 2:67 – 74).

தேவன் தானே நீதியை நிலைநிறுத்த வேண்டுமென்று விரும்பினார்! எந்த மனிதன் தன் மனதை புதிதாக மாற்றிக்கொண்டு இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பானோ அவனுக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டு.

இயேசுவின் மூலமாகத் தான் தேவன் நம்மை மன்னிதார் மற்றும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதற்கு காரணரும் இவர் தான்.

இயேசு செய்த இவ்விதமான நன்மைக்கு நன்றிக் கடனாக மற்றும் அவர் கொடுத்த மனவலிமையினாலே கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும், தங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து தங்களால் இயன்ற நன்மைகளை, செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இயேசுவை பின்பற்றுகிறவர்களின் இந்த மாற்றம் மற்றவர்களை தேவனின் பக்கம் இழுக்கிறது, தேவன் காட்டிய வழி மூலமாக நீதி செய்யும் படி உற்சாகப்படுத்துகிறது.

எவன் ஒருவன் வன்முறையின் மூலமாகவோ அல்லது கட்டாயத்தின் மூலமாகவோ தன் சொந்த நீதியை பின்பற்ற விரும்புவானோ அவன் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படுவான்.

தேவனின் விருப்பத்தை ஏற்று, அவரை பின்பற்ற யார் யார் விரும்புவார்களோ, அவர்களுக்கு சமாதானம் நிம்மதி ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது.

அந்த நாள் இரவிலே தேவ தூதர்கள் "உலகத்தின் இரட்சகர்" பிறந்தார் என்று மேய்ப்பர்களுக்குச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும்,மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக …

அன்பு என்ற வார்த்தையின் பொருள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை என்ற வார்த்தைகளோடு தொடர்புடையது. தேவனின் விலைமதிப்பில்லா இந்த பரிசை நாம் ஏற்கலாம் அல்லது மறுத்துவிடலாம்.

இது எப்படி நடக்கும் என்றும், எனக்கு புரியவில்லை என்றும் நாம் சொல்வதால், நாம் இதனை மறுக்கக்கூடாது. இப்படிப்பட்ட மறுப்பானது "பொதுவாக இறைவன்" பற்றிய போதனைக்கு எதிரானதாகும்.

உதாரணத்திற்கு யாத்திராகமம் 3:2 லிருந்து 4 வசனங்களையும், குர்‍ஆன் சூரா 20:11 லிருந்து 13 வரையிலும் உள்ள வசனங்களை படிக்கவும்.

இந்த வசனங்களில், எரியும் நெருப்பிலிருந்து தேவன்/இறைவன் மோசேயுடன் பேசினார் என்று நாம் படிக்கிறோம்.

இறைவன் எரியும் நெருப்பில் தன் குரலை/சத்தத்தை பொதித்து மோசேயுடன் கடந்த காலத்தில் பேச அவரால் முடியுமென்றால், நிச்சயமாக தன்னை ஒரு உடலில் பொதித்துக்கொண்டு நம்மை மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது என்பது அவருக்கு சுலபமானது தான்!

என் அருமை இஸ்லாமிய நண்பரே, உங்கள் இருதயத்தின் கண்களை தேவன் திறப்பாராக, நீங்கள் உண்மையான கிறிஸ்து ஜெயந்தியின் உண்மை மகிழ்ச்சியை அடைந்து ஆனந்தம் அடைவீராக.

கருத்துகள் இல்லை: