திங்கள், 5 ஜனவரி, 2009

திரித்துவமும் நீங்களும்

கேள்வி: நான் ஒரு முஸ்லிம். கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். திரித்துவக் கொள்கையைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், ஆனால், அதை என்னால் சரிவர விளங்கிக் கொள்ள முடியவில்லை, விளக்குங்களேன். நன்றி.

பதில்: கிறிஸ்துவ நம்பிக்கை மற்றும் வாழ்வு பற்றிய சுருக்கமான ஒரு மேலோட்டத்துடன் ஆரம்பித்து அதன் அடிப்படையில் திரித்துவக் கொள்கையினை விளக்குகிறேன். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்;

வெளியரங்கமாக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒரே மாதிரியாக இருந்து, நம்பிக்கை மற்றும் அதனைக் கடைப்பிடித்தலில் ஒற்றுமை இருப்பது போலக் காணப்பட்டாலும், உண்மையில் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்களே.

ஏனெனில், உலகினைப் பற்றிய‌ பார்வையில் அவர்கள் வெவ்வேறு வகையிலான‌ உந்துதலை உடையவர்கள்.

கிறிஸ்தவ நம்பிக்கையும் வாழ்வும் பைபிளை அடிப்படையாகக் கொண்டவை. பைபிள், தேவனையும் அவர் இயேசுவின் (al-masih) வழியாக‌ நமக்குச் செய்தவைகளை - அதாவது‍ அவரது வாழ்க்கை, போதனைகள், அவரின் மரணம் மற்றும் மரித்தோரினின்று உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மையப்படுத்துகிறது.

"கிறிஸ்தவன்" என்ற‌ வார்த்தை "கிறிஸ்து" என்பதினின்று உருவாகிறது. "கிறிஸ்து" என்பதின் அர்த்தம் "அபிஷேகிக்கப்பட்டவர்(anointed one)" என்பதாகும்.

இந்த "கிறிஸ்து" என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையாகும், இதற்கு இணையான அரபி வார்த்தை "மஸீஹா(Masih)" என்பதாகும்(இதற்கு இணையான எபிரேய வார்த்தை(பழைய ஏற்பாடு) "மேசியா-Messiah" என்ற வார்த்தையாகும்).

அவர் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு ந‌ம்மை இர‌ட்சிக்கும் பொருட்டு பூமிக்கு அனுப்ப‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தினால் "al-Masih" என்ற‌ழைக்க‌ப்ப‌டுகிறார் (லூக்கா 4:18-21).

கிறிஸ்த‌வ‌ உல‌கின் அனைத்துப் ப‌ரிமாண‌ங்க‌ளையும் த‌ழுவும் ஒரு உன்ன‌த‌ப் பார்வை "கிருபை"(ni`mah - Grace) என்னும் வார்த்தையில் அட‌ங்கியுள்ள‌து.

இது நம்மை நரகத்தின் நித்திய அழிவினின்று காப்பாற்ற, எள்ளளவும் தகுதியற்ற நமக்கு தேவன் காட்டும் ப‌ரிவு அல்ல‌து உத‌வி என்ப‌த‌னைக் குறிக்கும். தேவ‌னின் வார்த்தை யோவான் 1:17 ல் சொல்கிற‌து :

"நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின."

மேலும் எபேசிய‌ர் 2 : 8,9ன் ப‌டி, "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல".

பின்பும், "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." என ரோமர் 5:8 ல் நாம் வாசிக்கிறோம்.

பைபிளில் தேவன் தம்மை மூவொரு தேவனாக வெளிப்படுத்துகிறார் - அதாவது பிதா, குமாரன் (இயேசு‍ al-Masih), மற்றும் பரிசுத்த ஆவியாக வெளிப்படுத்துகிறார்.

பிதாவும், குமாரனும் பரிசுத்த ஆவியும் அடிப்படையிலும், நோக்கத்திலும் மனித குலத்திற்கான தேவ திட்டத்தின்படியும் ஒன்றானவர்களே(Father, Son and Holy Spirit are one in essence, in will, and in their plan for mankind.) .

இது தான் நீங்கள் கேட்ட திரித்துவம் என்கின்ற கிறிஸ்தவக் கொள்கையாகும். துரதிஷ்டவசமாக, பலர் இக்கொள்கையினைப் பற்றி அனேகம் தவ‌றான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இவைகளை நாம் ஆராய முயல்வோம். உதாரணமாக, நாம் என்ன தான் எடுத்துக் கூறினாலும் திரித்துவம் என்பதற்குப் பலர் என்ன பொருள் கொள்கிறார்கள் என்றால் "கிறிஸ்தவர்கள் உண்மையாகவே மூன்று கடவுள்களை நம்புகிறார்கள் என்பதே".

அதிலும் கொடுமையானது என்னவெனில், தந்தைக் கடவுள், தாய்க் கடவுள் (sahiba) மற்றும் மகன் என்ற கடவுள் இருப்பதாக‌ இப்படிப்பட்டவர்கள் சொல்வது தான்.

எந்த ஒரு கிறிஸ்தவனும் அவன் எந்த திருச்சபையைச் சார்ந்தவனாக இருப்பினும் இவ்வண்ணமாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்த எண்ணமே நமக்கு பாவத்திற்கும் சாபத்திற்கு முரியது, மற்றும் இது தேவதூஷணமாகும். நாம் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் மக்கள் இவ்வாறான மாறுபாடான கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தியும் அதனடிப்படையில் மீண்டும் மீண்டும் தவறான கணிப்புகளைக் கொண்டும் இருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், வார்த்தையின் பொருளினால் இக்கொள்கை முரண்பாடாக இல்லையா என நீங்கள் கேட்கலாம். இது நியாயமான கேள்வி தான்.

ஆனால், இதற்கு பதில் உறுதியாக "வார்த்தையின் பொருளினால் இக்கொள்கை முரண்பாடாக இல்லை"என்பதே.

நாம் மூன்று வித்தியாசமான, அமைப்பினாலும் நோக்கத்தினாலும் வேறுபட்ட மூன்று கடவுள்களைப் பற்றிப் பேசாமல், அடிப்படையில் மூன்றும் ஒன்றாகவும், ஒரே தன்மையில் இணையப்பெற்றுள்ள மூவொரு தெய்வத்தினைப் பற்றியே சொல்கிறோம்

அப்படியானால் "திரித்துவம்" என்பதன் விளக்கம் என்ன‌? இங்கு பிரச்சனை இக்கொள்கையில் இல்லை, ஆனால், மனித மனங்களின் எல்லையில் உள்ளது. கடவுளின் இயல்புகள் மனித மனங்க‌ளின் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.

பைபிள் இவ்வாறாக அறிவிக்க‌வில்லையா? "தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்தது;

உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. (யோபு 11:7-9)."

குரானும் கூட"laisa ka-mithli-hi shai'un" என்று சொல்கிறது "அவனைப் போன்று எப்பொருளும் இல்லை" – (சுரா 42:11). திரித்துவம் என்பது"bi-la kaif wa-bi-la tashbih (without asking how and without anthropomorphism)" என்று அரபியில் சொல்வதற்கு சமமாகும்.

இதை விஞ்ஞான அறிவினால் நிருபிக்கவோ அல்லது அதே விஞ்ஞான அறிவினால், "தவறானது" என்று நிராகரிக்கவோ முடியாது.

இது விஞ்ஞான அறிவிக்கு முரணானது என்று வாதிடுவது என்பது, "இறைவன் எதைச் செய்வார் அல்லது எதைச் செய்யமாட்டார்" என்ற விவரங்கள் பற்றி மனிதன் தீர்ப்பு வழங்க உட்கார்ந்துக் கொள்வதற்கு சமமாகும்,

ஒரு வரியில் சொன்னால், இப்படி செய்வது தெய்வ நிந்தனைக்கு சமமானது. சுருக்க‌மாக‌ சொல்லவேண்டுமானால், தேவ‌னின் இய‌ல்பை நாம் முற்றிலும் புரிந்து கொள்வ‌து ந‌ம‌து அறிவிற்கும் அனுப‌வ‌த்திற்கும் அப்பாற்ப‌ட்ட‌து

சுருங்கக் கூறின் மெய்யாகவே, தேவன் திரித்துவத்தைப் பற்றிய எல்லா விவரங்களை நமது அறிவுபூர்வமான ஆவலை பூர்த்தி செய்யும் பொருட்டு வெளிப்படுத்த வில்லை அல்லது அவரது தன்மையினை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ளும்படியாக வெளிப்படுத்த வில்லை.

பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய ஒவ்வொருவரும் நம் இரட்சிப்பிற்காகச் செய்தது என்ன? மற்றும் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ளும் அவசியத்திற்காகவே அவர் இவ்வாறு செய்தார்.

நம்மீதான கிருபையினை அனுபவிக்கும் முன்பாக இக்கிருபையின் மூலமாக‌, நம் வாழ்வில் இவ்வொவ்வொன்றின் இயக்கங்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். பைபிள் இவ்வாறாக போதிக்கிறது:

பிதாவின் திட்டம்: முதல் மனுஷனும் மனுஷியும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாள் தொடங்கி, நாம், அதாவது மனித குலம், நமது "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும்" மரித்தவர்களானோம் (எபேசியர் 2:1).

ஏனெனில் நாம் "தேவனுடைய‌ ஜீவனுக்கு அன்னியராகி" பிரிக்கப்பட்டுப் போனோம் (எபேசியர் 4:18). மேலும் ரோமர் 3:23 சொல்கிறது, "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகிவிட்டோம்".

ஆனால் பிதாவாகிய தேவன் நாம் அதே நிலையில் இருப்பதைக் கண்டு அவர் திருப்தியடைய‌வில்லை என வேதம் காண்பிக்கிறது.

அவர் தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த நம்மை, "முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" (எபேசியர் 2:13)

என்னும்படிக்கு ஒரு திட்டத்தை வைத்து இருந்தார். திரித்துவத்தின் ஒவ்வொருவரும் நமக்காகச் செய்த, செய்து கொண்டிருக்கும் மற்றும் செய்யப்போகும் காரியங்கள் இதோ:

குமாரனின் பங்கு: நமது பாவங்களினாலுண்டாகும் நித்திய மரணத்தினின்று நம்மை நாமே காத்துக் கொள்ள முடியாதபடியினால், தேவன் வெறுமனே தமது சட்டங்களையும், தம்மைப் பற்றிய பிரஸ்தாபஙளையும் அனுப்பிக்கொண்டு நம்மால் அறியப்படாமலும், தனித்தும் இருக்க விரும்பவில்லை.

அவர் இரட்சகராக‌ இயேசு கிறிஸ்துவின் வழியாய் மனித குலத்தை மீட்கும் பொருட்டாக‌ "இறங்கி வந்தார்". இயேசு தம்மைப் பற்றி,
"என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்" (யோவான் 6:38) எனச் சொல்கிறார்.

மேலும், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப் படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று"(யோவான் 3:16-18)

பரிசுத்த ஆவியானவரின் பங்கு: உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு நமக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து தேவனிடத்தில் இரட்சிப்பை வேண்டிக் கொள்ளும்போது தேற்றரவாளன் எனப்படும் தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம்முள் இறங்கி வாசம் செய்யவும் தேவனுக்காய் நாம் வாழவும் உதவி செய்வார்.

"நான் பிதாவை வேண்டிக் கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." (யோவான் 14:16-17)

"என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்."(யோவான் 14:26)

"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்கு உட்பட்டவர்களாயிராமல் ஆவிக்கு உட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." (ரோமர் 8:9)

பிதாவின் பங்கு: நான் பாவி என்று தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் பிரவேசித்து தேவனுக்காய் நாம் வாழ உதவி செய்கிறார். தேவன் நம்மை அவரின் புதல்வருள் ஒருவராய் ஏற்றுக் கொள்கிறார்.

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்."(யோவான் 1:12-13)

"அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே;

தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும் படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்(ரோமர்8:15-17)

நான் எழுதியவைகளைச் சிந்தித்து அதனைப் புரிந்துகொள்ள தேவனை வேண்டிக் கொள்ளுங்கள். நீங்களும் தேவனின் பிள்ளைகளாகலாம்.

கருத்துகள் இல்லை: