புதன், 4 பிப்ரவரி, 2009

அரசியலும் ஆன்மீகமும்

Bowler should bowl, batsman should bat என்பார்கள். இரண்டிலும் வல்லவரானாலும் மட்டை பிடிக்க வேண்டிய நேரத்தில் பந்து எரிபவரைப் போல் ஓடிவந்து கையிலுள்ளதை வீசினால் என்னாவது!

அதுபோலத்தான் அரசியலும் ஆன்மீகமும்.

ஆன்மீகவாத அரசியல் பேசுவது எவ்வளவு தவறோ அதுபோலத்தான் அரசியல்வாதி ஆன்மீகம் பேசுவதும்.

ஆட்சியில் இருந்தாலும் ஆட்சிக்கு வெளியில் இருந்தாலும் அரசியல்வாதி அரசியல்வாதிதான், மறுப்பதற்கில்லை. ஆனால் ஆட்சிக்கு வெளியில் இருக்கும் சமயங்களில் பேசுகிற அதே தோரணையில் (பொறுப்பற்ற முறையில் என்று சொன்னால் சற்று அதிகபட்சமாகிவிடும்) ஆட்சியில் இருக்கும் சமயத்திலும் பேசினால்? பிரச்சினைதான். அதிலும் மதம் அல்லது இறைநம்பிக்கையைப் பற்றி பேசும்போது...

எதிரணியில் இருக்கும் அரசியல்வாதி ஆட்சியாளரை குறைகூற ஆன்மீகம் என்ன எதை வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்வது சகஜம்தான்.

அவர் ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளையே ஆட்சியை இழந்த பிறகு வேறொருவர் செயல்படுத்த முனையும்போது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த முனைவதும் ஒன்றும் புதிதல்ல.

அதைத்தான் இன்று எதிரணியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.கவும் அ.இ.அ.தி.மு.கவும் செய்கின்றன. அந்த வகையில் அவர்களுக்கு இப்போது ஆயுதமாக பயன்படுவது ஆன்மீகம்.

அது வலுவிழந்து போகின்ற சூழலில் வேறெதையாவது கையில் எடுத்துக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

அதற்கு அயோத்தி ராமரானாலும் ராமேஸ்வரம் ராமரானாலும் ஒன்றுதான். காலத்திற்கேற்ப, சந்தர்ப்பத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளப்படும் கருவியும் கருத்தும் மாறிக்கொண்டே போகும்.

இதுபோலத்தான் கூட்டணிகளும். காங்கிரஸ் ஆட்சியை பதவியிழக்க செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மதசார்பற்ற ஜனதா தளம் மதவாத பா.ஜ.கவுடன் இணைந்து ஆட்சியை பகிர்ந்துக்கொள்ளவில்லையா? இதெல்லாம் இந்தியா போன்றதொரு நாட்டில் மிகவும் சகஜமப்பா என்கிற நிலைதான் இன்று!

மதம், இறை நம்பிக்கை என்பது அதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் புனிதமானது. இறைவனில் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்களிடம் அதையெல்லாம் எதிர்பார்ப்பதே முட்டாள்தனம்.

நான் இறை நம்பிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா என்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. அது என்னுடைய சொந்த விஷயம்.

ஆனால் பிறருடைய நம்பிக்கையை குறைத்துக் கூறுவதற்கோ அல்லது எள்ளி நகையாடுவதற்கோ எனக்கு உரிமையில்லை. அது என்னுடைய சொந்த கருத்து என்று ஒரு பொறுப்பான பதவியிலிருந்துக்கொண்டு நான் கூறினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அரசியல்வாதியானாலும் சரி ஆன்மீகவாதியானாலும் சரி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஜால்ரா அடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் முழுநேர அரசியல்வாதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.

அந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருக்கலாம் உயர் பதவியில் உள்ளவர்களும் இருக்கலாம். அவரவர் தேவைக்கேற்ப அதை வளைத்து, உருமாற்றி அர்த்தம் கொள்வது வழக்கமாகிப் போன ஒன்று.

இன்று மு.க அவர்கள் கூறியதை சரி என்று சொல்ல ஒரு கூட்டம் இருப்பது போல் வேதாந்தி சொல்வதிலும் தவறில்லை என்று சொல்லவும் ஒரு கூட்டம் இல்லையா?

இந்த இரண்டு கூட்டங்களுமே தங்களுக்கு பொதுவான எதிரியை தாக்க நாளைக்கு ஒன்று சேர்ந்துக்கொண்டாலும் வியப்பதற்கில்லை.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை நாளை ஆன்மீகத்திலும் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை வந்தாலும் வரும்.. யார் கண்டது!!

1 கருத்து:

nannawaas சொன்னது…

Harrah's Resort Atlantic City - JMT Hub
Harrah's Atlantic 논산 출장안마 City 거제 출장안마 features a 24-hour casino, a seasonal outdoor swimming pool and 동두천 출장안마 a 24-hour casino. The casino also 부천 출장마사지 has a 김포 출장샵 casino,