சனி, 6 ஜூன், 2009

பச்சையம்மாவும், மஞ்சளய்யாவும்

அம்மி மிதித்தலும் - அருந்ததி பார்த்தலும் - திவசம் கொடுத்தலும் - அர்த்தம் புரியாத வடமொழி மந்திரங்களும்!

அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் காலமாகிவிட்டார் என்ற செய்தியை ‘இந்து’ ஏடு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.

( அதை படிக்காதவர்கள் இங்கே பார்க்கலாம் )

அக்னிஹோத்திரம் 102 வயது வரையில் வாழ்ந்தவர்.

அவரது 100வது வயது வரையில் - அவரது சொந்தச் சாதியினர், அவர் வேதங்கள் அனைத்தையும் பயின்ற விற்பன்னர் என்றும், காஞ்சி மகாப் பெரியவாளின் வலது கரமாக, ஆலோசகராகச் செயல்பட்டவர் என்றும், இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத் கருடன் அமர்ந்து மத சுதந்திரத்திற்கான விதிகளை அரசியல் சட்டத்தில் உருவாக்கியவர் என்றும் ஓகோ, ஓகோ என்று புகழ்ந்து உச்சி மீது வைத்து மெச்சிக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவரது 100வது வயதில் அவர் நக்கீரன் இதழில் ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதி - இந்து மதத்தின் பேரால் ஒரு குறிப்பிட்ட சாதியினர் பரப்பிடும் மூடநம்பிக்கைகளையும், ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்க வும், அறியாமை யில் அவர்களை ஆழ்த்தவும், அவமதிக்கவுமான காரியங்களைக் கண்டித்து - அவர்களின் பாரபட்சமான - ஓர வஞ்சனையான செயல்களை அம்பலப்படுத்தினார். அவற்றிற்கு ஆதாரமாக - வேதங்களையே சுட்டிக் காட்டினார்.

இது அவரது சொந்த சாதியினரை ஆத்திரப்பட வைத்தது. அவர்கள் அக்னிஹோத்திரத்தை சந்தித்து அந்தத் தொடர் பிராம்மண விரோதம் என்று கண்டித்தார்கள். உடனே அதை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று வேண்டினார்கள். நிறுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்டினார்கள்.

அவர்களது இச்சகப் பேச்சுக்களுக்கோ, அச்சுறுத்தலுக்கோ - எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்தார் அக்னிஹோத்திரம். தொடர்ந்து எழுதினார்; இந்து மதத்தின் பேரால் நடத்தப்படும் அக்கிரமங்களை - அட்டூழியங்களை அம்பலப் படுத்தினார்.

போதாக் குறைக்கு அந்தத் தொடரின் இரண்டாம் கத்தை ‘சடங்குகளின் கதை’ என்ற தலைப்பில் எழுதி - புரோகிதர்கள் ஓதும் கல்யாண மந்திரங்கள் - கருமாதி மந்திரங்கள் எல்லாம் எவ்வளவு ஆபாசமானவை, முட்டாள்தனமானவை - பணம் பறிக்க நடத்தும் தந்திரங்கள் என்பதையெல்லாம் அம்பலப் படுத்தினார்.

அவரது எழுத்தில் மடமையைச் சாடும் உத்வேகம் இருந்தது, பகுத்தறிவின் ஒளி துலங்கியது!

தந்தை பெரியார் அவர்கள் புரோகிதம் ஒழிந்த திருமணங்களை - சுயமரியாதைத் திருமணங்களை வலியுறுத்தியது எவ்வளவு சரியானது என்பதை - சொல்லாமல் சொல்வது போல திருமணச் சடங்குகளை சாடி எழுதினார்.

விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகை என்று அழைப்பிதழில் போடுகிறீர்களே - அதற்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா உங்களுக்கு? விவாகம் என்ற சொல்லுக்கு மணப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு (கடத்திக் கொண்டு) ஓடிப் போவது என்று அர்த்தம் என்று ஆணி அறைந்தது போல சனாதனிகளுக்கு சவுக்கடி கொடுத்தார் அவர்.

அம்மி மிதித்து

அருந்ததி பார்த்து

திருமணம் நடத்துவதின் பின்னணியில் - அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் ஓதும் மந்திரங்களில் எவ்வளவு ஆபாசம் - அநாகரீகம் - மடமை பொதிந்து கிடக்கிறது என்பதை அந்த மந்திரங்களை எழுதி அவற்றின் சரியான அர்த்தம் என்ன என்பதைப் புட்டுப்புட்டு வைத்தார்.

- அம்மி மிதிப்பது

- அருந்ததி பார்ப்பது

- திவசம் செய்வது

போன்ற மூடநம்பிக்கைகள் பற்றி அவர் தமது ‘சடங்குகளின் கதை’யில் விளக்கியிருப்பதை மட்டும் படித்தாலே போதும்.

உண்மையைத்

தேடும் தமிழ்

அறிவுலகத்துக்கு

சமர்ப்பணம்

என்ற முகமனோடு அவர் எழுதியுள்ளவற்றின் ஒரு பகுதி வருமாறு:-

"அம்மி மிதிப்பது!

அதாவது பெண்ணை நடை நடையாய் அழைத்து வந்து அம்மியொன்று மீது ஏறி நிற்க வைப்பார்கள். உடனே புரோகிதர்

"ஆதிஷ்ட இமம் ஆஸ்மானம்

அஸ்மே வத்வம் ஸ்திராபவா..."

நீ எப்போதும் உன் குடும்பத்தை இந்த கல்லைப் போல ஸ்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது சந்தேகப்பட்டு குடும்பம் என்ற கட்டமைப்பு உடைந்து போகாமல் இந்த கல்லைப் போல குடும்பத்தை கெட்டியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

இதன் பின்னணி மலைவாழ் பழங்குடியினரிடமிருந்து நமக்குக் கிடைக்கிறது.

அதாவது மலைப் பழங்குடியின மக்கள் ஒவ்வொரு செய்கையின் போதும் ஒரு கல்லின் மீது ஏறி நின்று ‘இந்த கல்லைப் போல உறுதியாக இக்காரியத்தில் இறங்குகிறேன்....’ என சங்கல்பம் எடுத்துக் கொள்வார்கள்.

இதை கவனித்து பிரா மணர்கள்... அந்தக் கல்லை தூக்கி கல்யாணத்தில் போட்டார்கள்.

மலை மக்களான (கூசiயெடள)-ன் வழக்கத்தை... கல்யாணத்துக்கு கொண்டு வந்து விட்டாயிற்று. செங் கல்லை மிதித் தால்... வாழ்க்கை யும் செங்கல் போலவே உடைய லாம்.

அதனால் கருங்கல் தேர்ந் தெடுக்கப்பட்டது. அதுவும் வீடுகளில் கருங்கல்லுக்கு எங்கே போவது... அதனால் அம்மி யைக் கொண்டு வரச் சொன்னார்கள்.

சட்னி அரைப்பது, குழம்புக்கு உண்டான மசாலா அரைப்பது இவற்றுக்காக பயன்பட்டு வந்த அம்மியைப் பயன்படுத்தி - பிராமணர்கள் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள். அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் அம்மி மிதிப்பது என்ற சடங்கின் தோற்றம். அதாவது கல்லை மிதிப்பதுதான் இச்சடங்கின் கருத்துரு.

ஆனால்... வீடுகளில் கிடைக்கும் கல் அம்மி என்பதால் அம்மி மிதித்தல் ஒரு சடங்காகிவிட்டது.

அம்மி மிதிக்கும்போது அவளது பாதாதி அரவிந்தங்களில் பணிந்து... பூக்காம்புகள் சற்றே பருத்ததைப்போல அமைந்த அவளது கால் விரல்களை தன் உள்ளங்கையால் வருடியபடியே பெருவிரலுக்கு பக்கத்து விரலில் மெட்டியை மாட்டுகிறான் மணமகன்.

அப்போது... கல்யாணம் நடத்தி வைக்கும் வாத்யார்... மாப்பிள்ளையைப் பார்த்து, ‘நிமிர்ந்து மேல பாருங்கோ... அருந்ததி பாருங்கோ...’ என மேல் நோக்கி கை காட்டுகிறார்.

பையனும் பேந்த பேந்த மேலே பார்க்கிறான்.

"என்ன அருந்ததி நட்சத்திரம் தெரியுறதா?" என கேட்கிறார் வாத்யார்.

‘ம்... தெரியுதே...’ என்கிறான் பையன்.

அதாகப்பட்டது முகூர்த்தம் 5-5.30 ஆக இருக்கலாம். 6-6.30 ஆக இருக்கலாம். ஏன் 9-9.45 ஆக கூட இருக்கலாம். இப்பேர்ப்பட்ட சுபயோக சுப காலை வேளையில்... சாதாரண நட்சத்திரமே தெரியாது. பிறகு எப்படி அருந்ததி நட்சத்திரம் தெரியும்?

நான் கலந்துகொண்ட கல்யாணம் ஒன்றில் பையன் இதுபோலத்தான் ‘அருந்ததி நட்சத்திரம் தெரிகிறது’ என சொல்லிவிட்டான்.

நான்... கொஞ்ச நேரம் கழித்து ‘ஏண்டாப் பயலே... உன் கல்யாண முகூர்த்தம் - 7.30-8.15 விடிந்து 2 மணி நேரத்துக்கும் மேலே ஆகிவிட்டது. சூரியன் வானத்தில் சூப்பராய் ஜொலிக்கிறான்.

இப்பேர்ப்பட்ட நேரத்தில் உனக்கு அருந்ததி நட்சத்திரம் எங்கே தெரிந்தது? எனக்கும் கொஞ்சம் காட்டேன்’ - எனக் கேட்டேன்.

அவன்... பதறிப்போய் வாத்யார் தெரியுதுனு சொல்லச் சொன்னார். சொன்னேன் என்றான்.

இவனைப் போல பல மாப்பிள்ளைகள் மந்திரம் ஓதும் புரோகிதர்களின் கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்.

சரி அருந்ததி யார்?

உங்களுக்குத் தெரியுமா?

சூரிய வம்சத்து மன்னர் பரம்பரை திலிபன், ரகு, அஜன், தசரதன், ராமன் - என புகழ்பெற்றது. பெரும்புகழ் படைத்த சூரியவம்ச மன்னர் குலத்தின் ராஜகுருவானவர் வசிஷ்டர்.

இவரது மனைவிதான் அருந்ததி. இரண்டு பேரும் கணவன் - மனைவி என்றால் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்களாம்.

கற்புக்கரசிக்கு தமிழர்களாகிய நாம் கண்ணகியை காட்டுவதைப் போல... வடக்கத்தியர்கள் காட்டுவதுதான் அருந்ததி. ஆனால்... நாமோ கல்யாணத்தன்று கண்ணகியை மறந்துவிட்டு அருந்ததியைப் பார்க்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அருந்ததி - கற்புக்கரசி என்பதற்கான ஒரு கதையும் இருக்கிறது.

அதாவது அருந்ததி கற்பு நிரம்பியவள் என்பதற்காக இந்தக் கதை கட்டப்பட்டது.

தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு அப்பனாக இருந்தவனாக்கும்.

இந்த தட்ஷன், பிரகதி என்னும் குமரியுடன் கூடிக் கொஞ்சி தழுவித்திளைத்து சந்தோஷித்ததன் விளைவாக வந்து குதித்தவள் சுவாஹாதேவி.

இவளது இளமையும் அழகும் எடுப்பும் நடையும் நளினமும் எம மகராஜனையே கொல்லத் துணிந்தன. பார்த்தான் எமதர்மன். இவளை விட்டால் தனது அழகு என்னும் அஸ்திரத்தால் என்னையே கொன்று விடுவாள் போல, என மயங்கினான். சுவாஹாதேவி மீது காதல் கொண்டான் எமன்.

அதற்காக திட்டம் போட்டான். சுவாஹாதேவியை தன் சக்தியால் எலுமிச்சை பழமாக்கினான். அந்தப் பழத்தை விழுங்கி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொண்டான்.

தேவைப்படும்போது வெளியே எடுத்து அவளை அனுபவிப்பான். பிறகு விழுங்கி விடுவான்.

இப்படித்தான் ஒருமுறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து நந்தவனத்தில் உலவவிட்டு கொஞ்சிக் குலவினான் எமன். இருவரும் காமக் களியாட்டங்களில் கரைபுரண்டனர். மோகப் போரின் முடிவில் எமனுக்கு பயங்கர களைப்பு. என்ன செய்தான்? அப்படியே நந்தவனத்திலேயே தூங்கிவிட்டான்.

சுவாஹாதேவியோ தன் செழித்த அழகோடு நந்தவனத்தில் தனித்து விடப்பட்டாள். அப்போது அந்த வழியே அக்னிதேவன் நடந்து வர அவனைப் பார்த்துவிட்டாள்.

‘ஏய் அக்னி இங்கே வா... என்னிடம் சுகத்தைக் குடி. எனக்குள் எரியும் மோக நெருப்பை நீதான் தணிக்க முடியும்’ என அழைத்து அவனை அணைத்து தழுவி தன் ஆவலை தீர்த்துக் கொண்டாள் சுவாஹாதேவி.

சுவாஹா - அக்னி - சுகானுபவம் நடந்து முடிந்ததும் அந்த எலுமிச்சை வித்தையை கையிலெடுத்தாள் சுவாஹா.

இந்த அக்னி நமக்கு பூரண சுகம் தருகிறான். நாம் இவனை எலுமிச்சைப் பழமாக்கி விழுங்கிவிட்டால் வேண்டும்போது வெளியே எடுத்து தீண்டிக் கொள்ளலாம். ஆசைக் கோட்டை தாண்டிக் கொள்ளலாம்.

- என திட்டம் போட்ட சுவாஹா அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டாள்.

இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆசுவாசமாக விழித்தான் எமதர்மன். சுவாஹாதேவி எதுவுமே நடக்காதது போல தன் கச்சைகளை சரிசெய்து கொண்டு கச்சிதமாக உட்கார்ந்திருந்தாள்.

டக்கென அவளை ஓர் எலுமிச்சை பழமாக்கி முழுங்கினான் எமன்.

சரி இதில் அருந்ததி எங்கே வந்தாள் என கேட்கிறீர்களா?...

பொறுமை பொறுமை...

அருந்ததியைப் பற்றி சொல்ல வந்துவிட்டு சுவாஹா என்பவளைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறாரே?... என்னடா இவர் என நினைகிறீர்கள்தானே.

அப்படி அல்ல... அருந்ததியின் கற்புசக்தியை நிலைநாட்டத்தான் சுவாஹாதேவி கதையே சொல்லப்பட்டிருக்கிறது.

என்ன பார்த்தோம்?...

எமன், சுவாஹாதேவியை அனுபவித்த களைப்போடு நந்தவனத்தில் தூங்கிப் போனான். அந்த நேரம் சுவாஹாதேவி அக்னி தேவனை தரிசிக்க மோகித்தாள் - அக்னியோடு போகித்தாள்.

எமன் விழிப்பதற்குள் அக்னியும் சுவாஹாதேவியும் ஆசையோடு ஆலிங்கணம் செய்து முத்தத்தால் பரஸ்பர அபிஷேகம் செய்துகொண்டு - அந்த நந்தவன மெத்தையிலே மன்மத நர்த்தனமாடினர். எமன் தூங்கும்போது இவர்களின் இளமை விழித்துக் கொண்டு விளையாடிக் களித்தது.

எமன் விழித்ததும்... ஒன்றுமறியாதது போல் சுவாஹாதேவி... அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி தனக்குள் விழுங்கி விட்டது வரையில் பார்த்தோம்.

எமன் விழித்ததும் இளமை ததும்ப நின்ற சுவாஹாதேவியோ அக்னியை எலுமிச்சைப் பழமாக்கி ஏற்கனவே விழுங்கிவிட்டாள். அப்படிப்பட்டவளை எமன் ஒரு பழமாக்கி விழுங்கிவிட்டான்.

இதனால் என்ன ஆனது?.... அக்னி தேவன் சுவாஹாதேவிக்குள் சென்று விட்டதால் உலகில் அசாதாரண நிலை ஏற்பட்டது.

தாய்மார்கள் சமைக்க முடியவில்லை. ஏனென்றால் அடுப்புக்கு அக்னியில்லை. அடுப்புக்கு அக்னியில்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்?

விஷ்ணுவுக்கு விவரம் தெரிந்தது.

எமன் அசந்த வேளையில்... சுவாஹா அக்னியோடு ஆனந்தக் கூத்தாடியதையும்... பிறகு எலுமிச்சம் பழமாக்கி தன் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டதையும் அறிந்து கொண்டார் விஷ்ணு. இப்போது சுவாஹாதேவி எலுமிச்சை பழமாக எமன் வயிற்றில் இருப்பதையும் அறிந்தார் விஷ்ணு.

எனவே எமனை அழைத்து... ‘உனக்குள் எலுமிச்சை பழம் போல இருக்கும் சுவாஹாதேவியை வெளியே விடு’ என்றார்.

அப்படியே செய்தான்.

வெளியே வந்த சுவாஹாதேவியிடம் ‘உன் வயிற்றுக்குள் இருக்கும் அக்னிதேவனை வெளியே விடு’ என்றார் விஷ்ணு.

சுவாஹாதேவி ஆசைப்பட்டது போல்... அக்னிதேவனை அவளுக்கே மணமுடித்து வைத்தனர்.

ஆனால்... சுவாஹாதேவியை அவள் இளமையை ருசித்த அக்னிக்கு ஆசை இன்னும் அடங்கவில்லை.

அழகுப் பதுமையாய் சதைச்சிற்பமாய் சுவாஹாதேவி காத்திருக்க... அக்னியோ சப்தரிஷி மண்டலத்தில் எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு குஷியாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டான்.

இதை தனது மனைவியான சுவாஹாதேவியிடமே சொன்னான்.

அடியேய்... உன்னை அனுபவித்து அனுபவித்து எனக்கு சலிப்பாகிவிட்டது. சப்தரிஷி மண்டலத்தில் என்றும் இளமையாக இருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு தேக ஆனந்தம் கொள்ள துடிக்கிறேன் என்றான்.

நான் இருக்க ஏண்டா அவள்களுக்கெல்லாம் ஆசைப்படுகிறாய் என்றல்லவா சுவாஹா கேட்டிருக்கவேண்டும்?

கேட்டாளா?... இல்லை. பிறகு?... ‘அப்படியே ஆகட்டும்... ஆனால் ஒன்று அந்த ரிஷிகளின் மனைவிகள் போல நானே உருவம் எடுத்து வருகிறேன். நீ அனுபவித்துக் கொள்’ என்று யோசனை சொன்னாள் சுவாஹா.

சப்த ரிஷிகள் என்றால் ஏழுபேர். இவர்களில் ஒவ்வொரு ரிஷியின் மனைவியரை போலவும் உருவெடுத்து சுவாஹாதேவி வர... அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உயிர் நடுங்க உவகையாய் புணர்ந்து பூரித்தான் அக்னி. இன்னும் ஒருத்தி பாக்கியிருக்கிறாள். அவள்தான் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.

ஆறு ரிஷிகளின் மனைவிகளையும் அனுபவித்தவன், அடுத்து கடைசியாக அருந்ததியை அனுபவிக்க தயாராக இருந்தான்.

சுவாஹாதேவி தனது சக்தியால் அருந்ததி போல உருவம் எடுக்க முயற்சித்தாள். ம்ஹூம். முடியவில்லை. என்னென்னமோ செய்தாள். ஆனாலும் அருந்ததி போல் அவளால் உருவெடுக்க முடியவில்லை.

ஏனென்றால்... அருந்ததி கற்புக்கு அரசி.

இதை உணர்ந்து கொண்ட சுவாஹாதேவி, அருந்ததியை பார்த்தபடி... "தேவி... நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னிப்பாயாக. இனி... அக்னி முன்னிலையில் நிகழும் ஒவ்வொரு கல்யாணத்திலும்... உன்னைப் பார்த்து வணங்கினால் அந்த தம்பதிகள் சுகம், தனம், புத்திரர்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்" என்று கூறினாளாம்.

அதன்படிதான்... இன்னும் கல்யாணத்தின் போது அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறார்கள்.

அது காலை மணி 9-9.45 சூரியதேவன் எரியும் நேரமாக இருக்கும்போதும் அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறீர்களே எப்படி?...

உங்கள் மனைவியைவிட அருந்ததிக்கு கற்பு அதிகம் என நீங்கள் நம்புகிறீர்களா?...

அம்மி மிதித்தாயிற்று. ‘அருந்ததி’ யாரென்று பார்த்தாயிற்று. அடுத்து?...

சரி... இப்போது ஒரு மகன் தன் அம்மாவை இழந்து தவிக்கிறான். தனக்கு பால் ஊட்டியவருக்கே... பால் ஊற்றும் நிலைமைக்கு வந்துவிட்டோமே என கண்கள் அழுது அழுது பெருகுகிறது.

இதயம் உடைந்து அம்மா அம்மா என கதறுகிறது. எல்லாருக்குமே வாழ்க்கை என்பது அவர்களின் அம்மா போட்ட பிச்சை. அம்மாவின் புடவையில் கட்டிய தூளியின் கட்டில்தான் சின்னக் குழந்தையில் நாம் தூங்கியிருப்போம்.

நாம் வளர வளர அதைப் பார்த்து மலர்கிறவள் தாய் மட்டும்தான்.

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை

சான்றோன் எனக்கேட்ட தாய்..."

என வள்ளுவரே தாய்மையின் உயர்வை... மகனை வைத்துச் சொல்கிறார்.

தாய்தான் உலகத்தின் ஆதாரம். பெருமாளின் மனைவியைக்கூட ‘தாயார், தாயார்...’ என மரியாதையாக அழைப்பவர்கள் நாம். அப்படிப்பட்டவள் தாய். இன்றும் பூமியில் எக்கச்சக்க அழுக்குகள் இருந்தாலும்... ஒவ்வொரு தாய் உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் புனிதமாகிக் கொண்டே வருகிறது பூமி.

அப்பேர்ப்பட்ட தாயை இழப்பதே எவ்வளவு பெரிய துன்பம்? அந்தத் துன்பத்தை தணித்துக் கொள்வதற்காக... தாய்க்கு திவசம் செய்யப் போகிறான் ஒரு பாமரன்.

அப்போது புரோகிதன் சொல்கிறான்

"என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா

பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம..."

"எங்க அம்மா ராத்திரி வேலைகள்ல யார்கிட்ட படுத்துக்கொண்டு என்னைப் பெற்றாளோ தெரியாது. ஆனால்... நான் ஒரு உத்தேச நம்பிக்கையில்தான் அவளை என் அப்பாவின் மனைவியாகக் கருதுகிறேன். அவளுக்கு என் சிரார்த்தத்தை செய்கிறேன்..."

என்பதுதான் அந்த மந்த்ரத்தின் அர்த்தம். உன் தாயை உன் கண்முன்னே நடத்தை கெட்டவள் என சொல்வதுதான்... அதையும் உன்னை வைத்தே மறுபடி உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்த்ரத்தின் நோக்கம்.

இப்படிப்பட்டதுதான் இறுதிச் சடங்கு.

நேருஜி இறந்தபோது கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் "சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா?...", "தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ..." என்று கேட்டான்.

அதே போல அம்மாக்களை இழிவுபடுத்தும் இறுதிச் சடங்கே உனக்கொரு நாள் இறுதிச்சடங்கு செய்ய மாட்டோமா?..."

- என்று எழுதியிருக்கிறார் என்பதைவிட உள்ளம் குமுறி மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளார் அக்னிஹோத்திரம்!

அதனால்தான் அவர்மீது - கோபம். அவரது மறைவு பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருட்டடிப்பு!

அவரது 100வது வயது வரையில் - அவரை

சுருதி ஸ்மிருதி இதிஹாஸ

புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்

வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி

மஹோ பாத்யாய

மகா மஹோ பாத்யாய

அக்னிஹோத்திரம்

ராமானுஜ தாத்தாச்சாரியார்

என்று நீட்டி மூழக்கி போற்றிப் புகழ்ந்தார்கள். இந்துமத சடங்குகளையும் அதில் அடங்கியுள்ள மூட நம்பிக்கைகளையும் அவர் அம்பலப் படுத்தியதால் இப்போது அவர் நினைவே அவர்களுக்கு வேம்பாகக் கசக்கிறது.

சூட்சுமம் புரிகிறதா?






பச்சையம்மாவும், மஞ்சளய்யாவும்

தமிழ்நாட்டை மாறி மாறி ஆள்வது கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் என்று நீங்கள் நம்பினால் தவறு. ராகுவும் கேதுவும்தான் நம்மை ரகசியமாக ஆள்கின்றன.

நல்லதுக்கு நாள் குறிப்பது, யாருடன் கூட்டணி, எந்தத் தேதியில் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பது, எத்தனை தொகுதிகள் போட்டியிடுவது, என்ன கலரில் சால்வை போர்த்துவது, பிரசாரப் பயணத்தை எந்தத் திசையில் துவக்குவது என்பது வரை 'அரசியல் அஸ்ட்ராலஜர்கள்'தான் பாலிடிக்ஸ் பாதையைத் தீர்மானிக்கிறார்கள்.

ஜெயலலிதா பச்சையம்மாவாகவும், கருணாநிதி மஞ்சளய்யாவாகவும் மாறியதன் மர்மம் குறித்து விமர்சனங்கள் வம்பிழுத்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. முதல்வர் பதவியேற்க தேதியும் நாளும் குறிப்பதில் ஆரம்பித்த பழக்கம், கூட்டணிக் கட்சித் தலைவரைச் சந்திக்கக்கூட நேரம் குறிப்பதில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

மெகா குடும்பத்தின் மகா கூட்டணி மீண்டும் சேர்ந்ததுகூட ஜோசியர் குறித்துக் கொடுத்த தேதி, நேரத்தில்தான் நிகழ்ந்ததாகத் தகவல். தலைவர்கள் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழிதான் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

இதனால்தான் அரசியல் ஆசான்களை வளைத்துப் போடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள் ஜோதிடர்கள். குறித்துக் கொடுத்ததில் குருட்டாம்போக்கில் ஏதாவது நடந்ததும் 'ஆஸ்தான ஜோதிடர்' அந்தஸ்து மார்க்கெட் மதிப்பை அதிகரிப்பது வேடிக்கையான வாடிக்கை.

ஆஸ்தான ஜோதிடர் கலாசாரத்தை ஆரம்பித்துவைத்தவர் எம்.ஜி.ஆர்தான். அவருக்கும் வித்வான் லட்சுமணனுக்கும் இருந்த உறவு ஊரறிந்த ரகசியம். 'கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் தினமும் அவர் பேரை ஜெபிக்கணும்னு சொன்னாங்க. அதுக்குப் பதிலா 'கிருஷ்ணன்'னு ஒரு வேலைக்காரனை கூடவே இருக்கிற மாதிரி பாத்துக்கிட்டார். தினமும் 'கிருஷ்ணா... கிருஷ்ணா'ன்னு கூப்பிட்டுட்டு இருந்தார்!' என்றெல்லாம் கதைகள் உண்டு. அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதாவின் ஜோதிடப் பிரியம் உலகப் பிரசித்தம்!

எம்.பி. ஆனதால் டெல்லி அரசியலில் ஆர்வம்காட்டி வந்த ஜெயலலிதாவை, அவரது ஆரம்ப கால நண்பர் சேலம் கண்ணன் அனுப்பிவைத்ததாகச் சொல்லி ஒரு ஜோதிடர் சந்தித்திருக்கிறார்.

அவர்,'நீங்க மாநில அரசியலுக்கு வாங்க. வந்தால் முதலமைச்சர் வாய்ப்பு கைகூடும்!' என்று சொன்னாராம். அப்போது சிரித்திருக்கிறார்

ஜெயலலிதா. அதன் பிறகுதான் கூட்டங்கள், மாநாடுகளில் பங்கேற்பது என்று தன்னை முன்னிலைப்படுத்த ஆரம்பித்து, பாப்பு லாரிட்டி வர ஆரம்பித்ததும், தொடர்ந்து ஜோசியம் பார்க்க ஆரம்பித் தார் என்கிறார்கள்.

அவர் சொன்ன மாதிரியே 1991-ல் ஆட்சியைப் பிடித்ததும், இவை அனைத்தும் உண்மையான கணிப்புகள்தான் என்று மனப்பூர்வமாக நம்ப ஆரம்பித்தார். அதனுடைய வளர்ச்சி, இன்று அவருக்குத் தெரியாத ஜோசியர்களும் இல்லை, பரிகாரங்களும் இல்லை. அதைவிட, இன்று அவரே பாதி ஜோசியராகிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

அவரைப் பார்க்க ஒரு ஜோசியர் வந்தபோது, 'அதிசாரத்துல குரு மாறுதா?' என்று கேட்டபோது ஆடிப் போனாராம் அவர். இந்த மாதிரியான டெக்னிக்கல் வார்த்தைகள் சாதாரண ஆட்களுக்குத் தெரியாது. ஜோதிடம் தொடர்பான புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார்.

பெங்களூரு வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்த ஜோசியப் பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்தார். அவர்தான் சீனியர் புஷ்ஷூக்கு போர் நடத்த நேரம் குறித்துக் கொடுத்தவராம்.

'பிருஹத் ஜாதகம்' புத்தகம் அம்மா வசம் எப்போதும் இருக்கும். இப்போது அவர் ஜோசியர் களை அழைத்துப் பேசுவதெல்லாம் தனது சந்தேகங்களைக் கேட்பதற்குத்தானாம்.

96' தேர்தல் தோல்விக்குப் பிறகு, பரிகாரங்கள் பக்கமாக ஜெயலலிதாவின் சிந்தனை போனது. குருவாயூரப்பன் கோயிலுக்குப் போகும்போது அறிமுகமானவர் உன்னிக்கிருஷ்ணப் பணிக்கர். செல்லமாக அவரை கார்டன் ஆட்கள், 'யு.கே' என்று அழைக்கிறார்கள்.

இவர் வருகைக்குப் பிறகு பையனூர் பங்களாவே யாகம் வளர்க்கும் இடமாக மாற்றப்பட்டது. அவர் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பினார் ஜெ. பச்சை கலர் தேர்வும் அப்படித்தான் நடந்தது.

2001 முதல் 4 வருட காலங்கள் யு.கே. இல்லாமல் எந்தக் காரியமும் நடக்காது என்ற சூழ்நிலை தொடர்ந்தது. அப்போது வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்காது என்ற கணிப்புகள் வந்தபோது, பரிகார பூஜை நடத்தலாம் என்று தேதி குறித்தார் பணிக்கர். இதற்கு மொத்தச் செலவு 4 கோடி ரூபாயாம்.

ஆனால், அந்தத் தேர்தலில் 40-ல் ஒரு தொகுதியைக்கூட ஜெயலலிதாவால் கைப்பற்ற முடியவில்லை என்று ரிசல்ட் வந்தபோது அந்தக் கோபம் பணிக்கர் மீது திரும்பியது. அதோடு அவர் கதை முடிந்தது.

அதன் பிறகு வந்தவர் திருப்பூர் வெற்றிவேல். 'நான் ஜோசியர் அல்ல. அருள்வாக்கு சொல்பவன்' என்பார். தினமும் கார்டனுக்குப் போய் நாள், நட்சத்திரம் சொல்லி வந்தார்.

அதன் பிறகு இவரும் அவர்களுக்குச் சரி வரவில்லை. ஒரு சமயம் காழியூர் நாராயணன், வித்யாதரன், நம்புங்கள் நாராயணன் ஆகிய மூன்று பேரையும் ஒருசேர கார்டனுக்கு அழைத்து, ஜெயலலிதா கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறார்.

கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்துவது, அர்ச்சனைகள் செய்வது, தோஷங்கள் நீங்க பரிகாரங்கள் செய்வது போன்ற அனைத்தையும் சசிகலா கவனித்துக்கொள்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன் அடித்து ஊத்திய மழையில்கூட உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் லட்சுமி நரசிம்மசாமி கோயிலுக்குப் போய், பரிகார பூஜையைத் தடங்கல் இல்லாமல் முடித்து வந்துவிட்டார் சசிகலா.

தஞ்சைப் பக்கமாக இருந்து வரும் சில குறி ஜோசியர்களுக்கு சசிகலாவின் புண்ணியத்தால், நல்லகாலம்!

இப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் தி.மு.க-வின் ஜோசிய உறவுகள் மறைமுகமானவை.

தை மாதம் முதல் நாள்தான் இனி தமிழ்ப் புத்தாண்டு என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், சமயச் சொற்பொழிவாளர் அறிவொளி பேசினார், ''இனிமேல் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லாமல் போகுமா என்று என்னிடம் சிலர் கேட்டார்கள்.

அதுவும் இருக்கும். அது ஜோதிடக்காரர்கள் உருவாக்கியது. ஜோதிடம் என்றும் இருக்கும். ஜோதிடம் பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்ம தலைவரும் பார்ப்பார். அது எனக்குத் தெரியும்'' என்று சொல்லிப் பாராட்டினார்.

கருணாநிதிக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தியே கின்னஸ் சாதனை வாங்க இருக்கும் ஜெகத்ரட்சகன் நடத்திய கூட்டத்தில் அறிவொளி பேசியது அவரது கவனத்துக்குப் போகாமல் இருந்திருக்காது.

அவருக்குப் பதிலாக, அவரது குடும்பத்துப் பெண்கள் பல ஜோசியர்க¬ளைத் தங்கள் வசம் வைத்துள்ளார்களாம். ஆரம்பத்தில் திருவாரூரில் பார்வையற்ற ஜோசியர் ஒருவர் இருந்தாராம். குடும்பம் விரிய விரிய, ஆளுக்காள் தனித் தனி ஜோசியர்களை நம்புகின்றனர்.

மு.க.ஸ்டாலின் மனைவி சாந்தா, இதில் அதிக ஆர்வம்கொண்டவர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் கொல்லிமலைச் சித்தர் இதில் முக்கியமானவர். சில பரிகார பூஜைகள் அங்கு நடத்தப்படுகின்றன. சூரியன் நம்பூதிரி, ஸ்டாலின் வீட்டுக்கு வந்து செல்கிறார்.

செல்விக்கும் காந்தி அழகிரிக்கும் இதில் தீவிர நம்பிக்கை உண்டு. கடந்த ஓராண்டாகக் குடும்பத்துக்குள் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க செல்வி ஜோசியரைப் பார்த்துதான் முதலில் தங்கள் கவலையைச் சொன்னார்.

அவர் சொன்ன பரிகாரங்களை செல்வி சிரமேற்கொண்டு செய்து முடித்ததுதான், 'குடும்ப போட்டோ' எடுக்கும் வரை கொண்டுபோய் நிறுத்தியதாம். அனைத்தும் கைகூடிய பிறகு மறுபடியும் நன்றிப் பரிகாரமும் செய்து வந்திருக்கிறார் செல்வி.

ராஜாத்தி அம்மாள், கருமாரியம்மன் பக்தை. கருணாநிதியின் 77-வது பிறந்த நாளையட்டி திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 77 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்ததுவைத்ததும் அப்போது கருணாநிதி கோயிலுக்குள் போய் அத்திருமணங்களை நடத்திவைத்ததும் நடந்தது.

பல ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த கருமாரி தாசர் ராஜாத்திக்கான நல்லது கெட்டதைச் சொல்லி வந்தாராம். கருணாநிதி அணியும் மஞ்சள் துண்டு ரகசியம், தி.மு.க - தி.க. மோதலின்போது பூதாகரமாகக் கிளம்பி, சமாதான காலத்தில் அடங்கிவிடும் சமாசாரம்.

'மஞ்சள் துண்டு மடாதிபதி' என்று திராவிடர் கழக மேடையில்தான் முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் பட்டப் பெயர் கொடுத்தார். அதற்கு கருணாநிதி வரிசையாகச் சொன்ன காரணங்கள் நிறைய.

எனக்குக் கழுத்து வலி, மெத்தை போன்ற துண்டு அணியச் சொன்னார்கள், கண்ணுக்கு இதமான நிறத்தில்தான் சால்வை அணிய வேண்டும், எனக்கு இந்த நிற சால்வைதான் அழகாக இருக்கும்... இப்படிப் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

கடைசியாக புத்தர் நிறம் மஞ்சள்தான் என்று கருணாநிதி கண்டு பிடித்தார். குரு பலமிழந்து இருந்தால், மஞ்சள் கல் மோதிரமோ, சட்டையோ, துண்டோ அணிவது வழக்கம். அதன்படிதான் அவர் அணிய ஆரம்பித்தார்.

96'க்குப் பிறகு அவருக்கு ஏற்றம் ஏற்பட்டது இதனால் தான் என்பது ஊரறிந்த வதந்தி. இப்படி தி.மு.க., அ.தி.மு.க. வட்டாரத்து குடும்பங்களுக்கு வித்யாதரன், ஷெல்வீ ஆகிய ஜோசியர்கள் தொடர்ச்சியாகத் தங்கள் ஆலோசனைகளைத் தந்து வருகிறார்களாம்.

விஜயகாந்த் பக்தியும் பரிகாரங்களும் வெளிப்படையானவை. இதில் அதிக ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா. முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் போய்விட்டு வந்து தான் செய்கிறார்கள்.


ஏ.எம்.ராஜகோபாலனைச் சந்தித்து கேட்டுக்கொள்கிறாராம் சரத்குமார். நிறைய கோயில்களுக்கு ராதிகாவுடன் அவர் தரிசனம் தருவதன் பின்னணி இதுதானாம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானதும் வாஸ்து அடிப்படையில் சத்தியமூர்த்தி பவனையே மாற்றிக்கொள்ளும் அளவுக்கு தங்கபாலுவின் நம்பிக்கைகள் பலமானவை.

நம்மூர் ஜோசியர்களின் துல்லியக் கணிப்புகளைப் பார்த்து கடல் கடந்துகூட தலைவர்கள் வருகிறார்கள். ஷெல்வீயை, இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொடர்ந்து வந்து சந்திக்கிறார்.

எதிர்பார்ப்புகள் நிறைந்தது அரசியல் உலகம். அதனால்தான் எதிர்காலத்தைக் கணிப்பவர்களுக்கு இங்கு அளவுக்கதிகமான மரியாதை. சில நம்பிக்கை வார்த்தைகளை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்வதைத் தாண்டி, ஜோசியர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் பயணமாகி வாழ்க்கையை இழந்த தலைவர்கள் நிறைய.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் அவர். 'நிழல் முதல்வர்' என்று சொல்லும் அளவுக்கு அனைத்தையும் தீர்மானித்தார். எம்.ஜி.ஆருக்கு அப்புறம் நீங்கள்தான் முதல்வர் என்று மூத்த ஜோசியர் சொன்னார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக ஜானகி அணி தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு ஜெயலலிதாவிடம் போய் அமைச்சராகும் அளவுக்கு நெருக்கடி வந்தது.

நேரம் சரியில்லை என்று பரிகாரம் சொல்லப் போன ஜோசியர், கதவு இருந்த இடத்தை மாற்றி அங்கு செக்யூரிட்டி உட்காரும் ஓய்வு அறையாக ஆக்கச் சொன்னார்.

அது மாதிரியே வாசல் இடிக்கப்பட்டன, புது அறைகள் கட்டப்பட்டன. பால் காய்ச்சப்பட்டது. பால் காய்ச்சிய அன்று மாலையே அமைச்சர் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

தசாபுத்திதான் காரணம் என்பார்கள் ஜோசியர்கள். சொந்தப் புத்தி சரியாக இருந்தால் எந்தப் புத்தி தடுக்க முடியும்?

கருத்துகள் இல்லை: